தருமபுரி மாவட்டம், குண்டல்பட்டி,பெரியாம்பட்டி, பொன்னேரி, கெரகோடஅள்ளி காரிமங்கலம், அகரம் பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் டீசல் திருட்டும், கலப்பட டீசல் விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது.
சேலம் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரகணக்கான லாரிகள் கடந்து செல்கின்றன.இப்படி கடந்தும் செல்லும் குறிப்பிட்ட லாரிகளிலிருந்து தான் சத்தமின்றி டீசல் திருட்டு நடந்து வருகிறது.லாரி ஓட்டுநர்கள் தங்களின் முதலாளிகளுக்கு தெரியமால் லாரியின் டீசல் டேங்கிலிருந்து டீசலை திருடி அங்கே தயராக இருக்கும் கலப்பட டீசல் விற்பனை கும்பலிடம் டீசலை விற்று பணமாக்கி விடுகின்றனர்.
பெட்ரோல் பங்குளில் விற்கப்படும் விலைக்கு பாதி விலையில் லாரி ஓட்டுநர்களிடம் வாங்கப்படும் டீசல், கலப்படம் செய்யப்பட்டு பெட்ரோல் பங்கின் விலையை விட குறைவான விலைக்கு கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுகிறது. டிராக்டர்கள்கள், ஜே சி பி இயந்திரங்கள்,ஆயில் மோட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக டீசலை வாங்க வேண்டியவர்கள் விலை குறைவாக கிடைக்கும் இந்த கலப்பட டீசலை வாங்கி செல்வதால் பெட்ரோல் பங்குகளை விட திருட்டு கலப்பட டீசல் விற்பனை என்பது படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துறை அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு துறை,வருவாய்த்துறை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது குறித்து லாரி உரியைாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும் போது தருமபுரி மாவட்டம் தொடங்கி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை மட்டுமே இது போன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கலப்பட டீசல் விற்பனை செய்யபடுகிறது.தேசிய நெடு்ஞ்சாலை ஓரமாக லாரிகள் மறைவாக நிறுத்தி டீசல் எடுக்க வசதியாக குடிசைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.மறைவான இடங்களுக்கு லாரியினை கொண்டும் செல்லும் ஓட்டுநர்கள் அங்கே தயாராக இருக்கும் கலப்பட டீசல் விற்பனை செய்யும் கும்பலிடம் பாதி விலைக்கு டீசலை விற்று கை மேல் பணத்தை பெற்றுக்கொள்கின்றனர். பிறகு அந்த டீசலில் கலப்படம் செய்யபட்டு விலை மலிவாக விற்பனைக்கும் வந்து விடுகிறது.ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி பெற்று லட்சங்களிலும் கோடிகளிலும் முதலீடு செய்து அதன் பிறகு நடைமுறைச்செலவுகள் என பல செலவுகளையும், சிரமங்களையும் கடந்து தான் பெட்ரோல் பங்க் நடத்த முடிகிறது.ஆனால் எந்திவித மூதலீடுமே இல்லாமல் சட்ட விரோதமாக எந்தவித பாதுகாப்புமின்றி கலப்பட டீசல் விற்பனை நடந்து வருகிறது.சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை காரணம் கவனிப்புகளே என தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்டும் கலப்பட டீசலால் பெரிய அளவிலான தீ விபத்துக்கள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.இனி வரும் காலங்களிலாவது அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள்,மத்திய, மாநில அரசுகள் கலப்பட டீசல் விற்பனை கும்பல் மீது சட்டபபடியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்..
குறிப்பாக காரிமங்கலம் காவல் நிலையப்பகுதிகளில் இது போன்ற டீசல் திருட்டு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இந்த திருட்டை கண்டு கொள்ளாமல் இருக்க மாதந்தோறும் காரிமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கும், குடிமை பொருள் குற்ற புலனாய்வு தடுப்பு போலீசாருக்கும், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு கவனிப்புகள் கன கச்சிதமாக சென்று விடுவதால் டீசல் திருட்டு மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.இது தவிர பேட்ரோல் போலீசாருக்கும் கூடுதலான சிறப்பு கவனிப்புகள் சென்றுவிடுவதால் பேட்ரோல் போலீசார் ஆதரவுடனே டீசலை திருடலாம் எந்தவித தடையும் இல்லை, காரிமங்கலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் மூலம், மாத மாதம் அத்துனை அதிகாரிகளுக்கும் மாதம் தவறாமல் மாமூல் சென்று விடுவதால் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் காவல் நிலையப்பகுதிகளில் லாரிகளில் டீசல் திருட்டும் கலப்பட டீசல் விற்பனையும் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.பெரிய அளவிலான தீ விபத்துக்கள் நடக்கும் போது கண் துடைப்பிற்காக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை போல நாடகம் நடத்த இருக்கிறார்கள்.
டீசல் திருட்டை தடுக்கவே முடியாதா என்பது தான் அனைவரது ஆயிரம் ஆயிரம் கேள்வியாக உள்ளது.